Pottuvil village

இப்போது புதிய வலைப்பதிவில்….

இவ்வலைப்பதிவு புதிய இடத்திற்கு புதிய பெயருடன் மாற்றப்பட்டுள்ளது. இந்த வலைப்பதிவினை http://pottuvil.wordpress.com என்ற முகவரியில் காணலாம். தொடர்ந்தும் இணைந்திருங்கள்..

பொத்துவிலின் அழகிய காட்சிகள் சில…

Sea waves and rock
Boat and the sea

Tks: Flickr.com

அருகம் குடா பாலம் - (அருகம்பை பாலம்)

2004இல் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் பொத்துவில் அறுகம் குடா சார்ந்த உல்லைப் பகுதியும் அடங்கும். இங்கு உறுதியாக அமைந்திருந்த பாலம் சிறிய சேதங்களுக்கு மட்டுமே உள்ளானது. ஆனால் பாலத்தின் தொடர்ச்சியாய் அமைந்த பாதை பொங்கியெழுந்த கடல் நீரினால் கழுவிச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் பாதைகள் அழிந்த இடங்கள் ஒரு தற்காலிக பாரிய புதிய இரும்புப் பாலமொன்றினால் ஈடு செய்யப்பட்டது. அது தொடர்புகளை பரந்து விரியச் செய்தது. போக்குவரத்தினை வழமை நிலைக்கு கொண்டு வந்தது. அந்த புதிய பாலத்தின் தோற்றமே இது.

New Bridge, Arugam Bay

சுனாமியின் பின்னரும் உறுதியாக நிலைத்து நின்று தன் பணி தொடரும் பழைய பாலத்தினையும் பார்த்துவிடல் அவசியமல்லவா? ஆம், இதோ பழைய பாலத்தின் தோற்றமொன்று. குறிப்பு: இந்த நிழற்படம் சுனாமிக்குப் பின்னர் (2005.07.13ஆம் திகதி) எடுக்கப்பட்டது.

Old Bridge, Arugam Bay

பொத்துவில் மண்மலை

இனிய இயற்கை காட்சிகள் நிறையவே நிறைந்த பொத்துவிலின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்ததே மண்மலை என்றால் மிகையில்லை. இது பொத்துவிலின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் உறுதியுடன் நிமிர்ந்து நிற்கக் காணலாம். மண் ஒன்று சேர்ந்து மலையாக உருவெடுத்துள்ளது, ஓர் ஆச்சரியமான விடயம்தான். இதன் உயரம் 32 அடியையும் விஞ்சி நிற்பதை அங்கு செல்லும் எவரும் உணர்ந்து கொள்வர். இதன் உச்சியில் நின்று திக்கெல்லாம் நோக்கும் போது, அலை பாயும் கடல், செழித்து வளர்ந்த தென்னைகள், அடக்கமாய் வீற்றிருக்கும் அறுகம் களப்பு என அமைந்த இயற்கை எழில்கள் விழிகளுக்கு விருந்தாகும். மண் சேர்ந்து மலையானது மட்டுமல்லாது, அதனிடையிடையே பச்சைப் பசேலென வளர்ந்து விரிந்த பாரிய மரங்கள் பார்வைக்கு பக்குவமாய் திகழும். முழு நிலவில் பலரும் இங்கு தங்கள் பொழுதை இனிதாகக் களித்துவிட கூடிடுவார்கள். பௌர்ணமி நாளில் மண்மலையின் உச்சியிலிருந்து கடலை பார்க்கும் போது, நிலவின் விம்பம் கடல் நீர்ப்பரப்பில் தெரியும் காட்சி இருக்கின்றதே, அக்காட்சியின் அழகை  வர்ணிக்க சொற்களே இல்லை. குளிர் காற்று சில்லென்று வீசுகையில் நிலவினை மேகம் மறைத்து பின்னர் அதனைத் தாண்டிச் செல்லுகையில் மண்மலையில் ஒளி மாற்றங்கள் கொண்ட விழாக் காட்சி போல் இரம்மியமான பொழுதுகள் மாறி மாறி வரும்.

Pottuvil Sand hill

மண்மலையின் தெற்காக ஜலால்தீன் சதுக்க பிரதேசமும், கிழக்காக கடற்கரையும், மேற்காக மதுரஞ்சேனை பிரதேசமும், வடக்காக சின்னப்புதுக்குடியிருப்பு பிரதேசமும். எல்லைகளாக அமைந்து காணப்படும். கடந்த 2004இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது, மண்மலையானது ஒரு தடைச்சுவராக செயற்பட்டு அப்பிரதேசத்தில் சூழ வாழ்ந்த மக்களை பாதுகாத்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

பொத்துவில் மண்மலை எப்போது, எவ்வாறு உருவாகியது? என்பதற்கான தெளிவான பதில்களோ, விளக்கங்களோ கிடைக்கப்பெறவில்லை. ஆனாலும் பண்டைய காலத்தில் கடற்கோள் போன்ற ஓர் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள போதே மண்மலை உருவாகியிருக்கக்கூடும் என வரலாற்றில் ஆர்வம் கொண்டோர் சொல்வார். ஆயினும் பொத்துவில் அறுகம் குடா, மிகவும் முக்கியமான துறைமுகமாகக் திகழ்ந்ததாகவும் அறுகம் குடா என்பது Lithus Magnus எனும் பெயரில் வழங்கப்பட்டதாகவும் கி.பி 140 காலப்பகுதியில் தொலமியினால் வரையப்பட்ட வரைபடமும் குறிப்புகளும் குறிப்பிடுகின்றன. அறுகம் குடா சிறந்த துறைமுகமாக திகழ்வதற்கு அவ்விடம் அமைந்திருந்த மண்மலை பெரிதும் காரணமாக அமைந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஏனெனில் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை பாதுகாப்ப வைக்க ஒரு தளமாக மண்மலை அமைந்நதாக தெரிவிக்கின்றனர்.

Pottuvil Sand hill

இவ்வாறான பழம் பெரும் வரலாற்றினைக் கொண்ட மண்மலை இன்னும் அமைதியாய் ஏன் அடக்கமாய் நிமிர்ந்து நின்று மக்களுக்கு ஓய்வெடுக்கும் களமாக அமைந்துள்ள நிலையை எண்ணுகையில் இயற்கையின் படைப்புகளுக்கு ஏது நிகர் என வினவத் தோன்றுகின்றது.

எங்கள் ஊர் பொத்துவில்

காரிருள் பிரியு முன்னே
கழனியை நாடித் தூய
ஏரிலே நெஞ்சைப் பூட்டி
இன்புறும் துணைவரோடு,
சீரிலே வாழும் மாதர்
சென்றுமே பணிகள் செய்து
பார்புகழ் கொழிக்க வாழும்
பண்பினர் வாழும் நாடு!

கொட்டிடும் மழை காலத்தும்
கோப்பையைக் கையிலேந்தி,
கட்டெழில் கயலின் கண்ணார்
கன்றினை அவிழ்த்துச் சென்று
இட்டமாயப் பால் கநற்து
இதமுறப் பதமுமேற்றி
பட்டினப் பகுதிக் கெல்லாம்
பால் கொடுப்போர் வாழ் நாடு!

ஏடுகள் கண்டி ராத
இன்கவி பிறக்கும் பூமி
கூடவே மூவினத்தோர்
கொள்கைகள் வாழும் பூமி,
தேடரும் வாவி மூன்றைத்
தன்னகம் கொண்ட தாலே
பாடகர் பாவில் போற்றும்
பொத்துவில் எங்கள் ஊரே!

1968.10.14ஆம் திகதி தினபதி பத்திரிகையில் வெளியான கவிதை.

அன்புடன் பொத்துவிலுக்கு அழைத்துச் செல்கின்றோம்…..

பொத்துவில், இலங்கையின் தென்கோடியில் அமைந்துள்ள இயற்கை அழகுகள் நிறையவே நிறைந்துள்ள அழகெழில் கொஞ்சும் கிராமமாகும். இது மூன்று பக்கம் நிலத்தினாலும் ஒரு பக்கம் கடலினாலும் சூழப்பட்டுள்ளது. பொத்துவிலின் சனத்தொகை 39196 ஆகும். இந்த ஊர் கொண்டுள்ள இயற்கை எழில்கள் எண்ணிலடங்காதவை. இவை பற்றிய தகவல்களையும் காட்சிகளையும் பகிர்ந்து கொள்ள எண்ணினோம். அதன் விளைவாக உறுப்பெற்றதே இந்த வலைப்பதிவு. இவ்வலைப்பதிவு பொத்துவில் பற்றிய தகவல்களை மட்டுமல்லாது, அங்கு இடம்பெறும் சமகால நிகழ்வுகள், அங்குள்ள மக்களின் சாதனைகளை உலகிற்கே அறிவிக்கும் ஓரூடகமாய் இது திகழப்போகின்றது. தொடர்ந்தும் இவ்வலைப்பதிவுடன் நீங்கள் இணைந்திருப்பீர்கள் என திடமாக நம்புகின்றோம். இது பொத்துவிலில் இரண்டு ஆண்டுகளாக செயற்பட்டு வரும் இன்டலெக்ட் இமேஜ் (Intellect Image) அமைப்பின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப அலகின் (ICT Unit) இன்னுமொரு முயற்சியாகும். அண்மையில் இன்டலெக்ட் இமேஜ் அமைப்பு அதன் ஈராண்டு நிறைவு விழாவினை கடந்த 2006.03.24 ஆம் திகதி வெகுவிமர்சையாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான செய்திகள் மற்றும் நிழற்படங்கள்; இன்டலெக்ட் இமேஜ் வெப் ப்ளாக்கில் (வலைப்பதிவில்) ஆங்கிலத்திலும் தமிழிலும் பதியப்பட்டுள்ளன. புதிய செய்திகள் பலவற்றுடன் விரைவில் மீண்டும் சந்திப்போம்….. தொடர்ந்தும் இணைந்திருங்கள்………